சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், அதிமுக கட்சி விதியின்படி, பொதுச்செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சூரிய மூர்த்தியின் மனுவை நிராகரிக்கக்கோரி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், சூரிய மூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை. முகத்தை காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து கொண்டு மனுதாரரை இயக்குகின்றனர். பின்னர், அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது. கொரோனா சூழல் காரணமாக உட்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வரும் டிசம்பர் மாதம் 2021 வரை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.