டெல்லி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறியது, தடுப்பூசி பற்றாக்குறை, அதன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று 11 மணிக்கு தொடங்கியது. எதிர்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை மதியம் 12.24 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
அமளியும் மோடியும்...
இந்நிலையில் மீண்டும் மாநிலங்களவை கூடியது. அப்போது வேளாண் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அட்டவணை சாதி அமைச்சர்கள் மற்றும் பெண் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. பழங்குடியின அமைச்சர்கள் குறித்த அறிமுகத்தை கேட்க சிலர் தயாராக இல்லை என கூறினார்.
எதிர்க்கட்சிகள் அமளி ஏன்?
ஒத்திவைப்பு நோட்டீஸை அளித்துவிட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவது ஏன்? என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டாலும் புதிய அமைச்சர்களின் அறிமுகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவையை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.