ரியாத்: புனித ஹஜ் பயணம் நேற்று தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மெக்காவில் குவிந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஹாஜிகள் யாருக்கும் சவுதி அரசு அனுமதி வழங்கவில்லை. சவுதி அரேபியாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60,000 பேருக்கு மட்டும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவர்கள் மெக்காவை அடைந்து நேற்று முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள இஸ்லாமியர் ஒருவர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை அடுத்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வளாகம் முழுவதும் பார்க்க முடிகிறது. நல்ல முறையில் வரவேற்று தொற்று தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கின்றனர் என்று குறிப்பிட்டார். இதற்காக மினா, அரஃபா, முஸ்தலிபா உள்ளிட்ட பகுதிகளில் ஹாஜிகளுக்கு சிறப்பு தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 6 நாட்களுக்கு ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவார்கள். சிறப்பு அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் மெக்காவிற்குள் செல்ல அனுமதி இல்லை. சவுதியில் வசித்து வரும் 200க்கும் அதிகமான இந்தியவர்கள் இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளார்.