ஆவடி: திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்(30). பெயின்டர். இவரது மனைவி கவுரி(24). தம்பதிக்கு தீஷித்தா(3) என்ற மகளும், அஸ்வின் (ஒன்றரை) என்ற மகனும் உண்டு. ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ரமேஷ், கவுரி ஏலச்சீட்டு எடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால், ரமேஷ் மனைவி கவுரியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், மன உளைச்சலில் கவுரி குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, கவுரி, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு பைப்பில் கயிறு கட்டி தனித்தனியாக தீஷித்தா, அஸ்வின் இருவரையும் தூக்கு மாட்டி தொங்கவிட்டு உள்ளார். பின்னர், அவரும் அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையில், தற்செயலாக வீட்டு கீழ்த்தளத்தில் வசிக்கும் மைத்துனர் ராஜேஷ், கவுரி மற்றும் குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர் மூவரும் தூக்கில் தொங்கி கொண்டு பார்த்து கதறி அழுதார். பின்னர், ராஜேஷ் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அழைத்துள்ளார். மேலும், அவரது சப்தம் கேட்டு மக்கள் ஓடி வந்தனர். பின்னர், அனைவரும் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இதன்பிறகு, அவர்கள் தூக்கில் தொங்கிய கவுரி மற்றும் இரு குழந்தைகளை மீட்டு, ஆட்டோ மூலமாக திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவுரி, இரு குழந்தைகளும் இறந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், புகாரின்பேரில் பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் மது அருந்த ரமேஷ் பணம் கேட்டு, மனைவி கவுரி கொடுக்காததால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரமேஷ் அவரை திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால், மனமுடைந்த கவுரி இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கவுரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால், திருவள்ளூர் ஆர்.டி.ஒ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநின்றவூரில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.