×

வண்டலூர் தம்பதி கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொலையாளிகளை நெருங்கிவிட்டோம்: மாவட்ட எஸ்பி விஜயகுமார் தகவல்

கூடுவாஞ்சேரி: வண்டலூரில் நடந்த தம்பதி கொலை வழக்கில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொலையாளிகளை நெருங்கிவிட்டோம் விரைவில் பிடித்து விடுவோம் என செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார் தெரிவித்தார். சென்னை வண்டலூர் அருகே கொளப்பாக்கம் கிராமம், அண்ணா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (63). சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது, முதல் மனைவி அலிஸ் (55). இவர்களுக்கு இம்மானுவேல் (28) என்ற மகனும், பெனிட்டா (30) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கூடுவாஞ்சேரியில் தனித்தனியாக வசிக்கின்றனர். சாம்சன் தினகரனின் 2வது மனைவி ஜெனட் (52). இவருக்கு குழந்தைகள் இல்லை. இவருடன்தான் சாம்சன் தினகரன் வசித்து வந்தார்.

தனது தந்தையிடம் பேசுவதற்காக முதல் மனைவியின் மகள் பெனிட்டா செல்போனில் தொடர்பு கொண்டார். சாம்சன் தினகரன் போனை எடுக்காததால், மீண்டும் நேற்று முன்தினம் காலை பெனிட்டா போனில் தொடர்பு கொண்டார். அவர், போனை எடுக்காததால் பெனிட்டாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சாம்சங் தினகரனின் முதல் மனைவி, மகன், மகள் ஆகியோர் கொளப்பாக்கத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சாம்சங் தினகரன், அவரது 2வது மனைவி ஜெனட் ஆகியோர் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு இறந்துகிடந்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார், வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் வந்து சடலங்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இக்கொலை, தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி விஜயகுமார் கூறுகையில், ‘சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அதில், பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடித்துவிடுவோம். அவர்களை பிடித்த பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும்’ என்றார்.

Tags : Vandalur ,District ,Vijayakumar , Couple murder, surveillance camera, killer, District SP Vijayakumar
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!