மீனம்பாக்கம்: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து நேற்று அந்நாட்டு சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை இந்திய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாமக்கல்லை சேர்ந்த ஷெரீப் (36) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை சோதித்தனர்.அதில், இவர் சென்னை போலீசாரால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்றும், இவர்மீது வரதட்சணை கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது என கம்ப்யூட்டர் மூலமாகத் தெரியவந்தது.
இதையடுத்து அவரை வெளியே விடாமல், தனியே வைத்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டில் சென்னை எம்கேபி நகர் போலீசாரால் இவர்மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் இவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாகி, கத்தார் நாட்டுக்கு தப்பி சென்றிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். இதுகுறித்து அனைத்து விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கத்தார் நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்துக்கு நேற்று ஷெரீப் வந்ததால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை மாநகர போலீசார் விரைந்து வந்தனர். அங்கு குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த ஷெரீப்பை போலீசார் காவலில் எடுத்து சென்றனர்.