கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே தலா 3 ஒன்டே மற்றும் 3 டி.20 போட்டிகள் நடக்கிறது.இதில் முதல் ஒருநாள்போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கி நடக்கிறது. தவான் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் இலங்கை அணியும் புதிய கேப்டன் தசுன் ஷானகா தலைமையில் களம் காண்கிறது. போட்டி தொடர்பாக அவர் கூறியதாவது: இரு அணிகளும் சமமாகத் தொடங்கும், ஏனெனில் அவர்கள் (இந்தியா) புதிய வீரர்களைக் கொண்டு வந்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஐபிஎல் விளையாடியுள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இன்னும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை, எனவே இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு உள்ளது, என்றார்.
இந்திய துணை கேப்டன் புவனேஸ்வர்குமார் கூறுகையில், இந்திய அணியில் மிகவும் திறமையான இளைஞர்கள் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் நாங்கள் அவர்களைப் பார்த்தோம். இந்திய அணியில் இடம் பிடிக்க அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு அதிக வழிகாட்டுதல் தேவை என்று நான் நினைக்கவில்லை. ஏதாவது பேச வேண்டிய அவசியம் இருந்தால் அவர்களுடன் சென்று பேசுவோம். எதையும் சிக்கலாக்க நாங்கள் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம். எங்களுடன் ராகுல் டிராவிட் உள்ளார். அவர் நன்றாக வழிநடத்துகிறார், என்றார். இதனிடையே இரவு 8 மணிக்கு மேல் கொழும்பில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.