சென்னை: சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: 2 நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. ஆனால், அவைகள் முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. கடந்த 13ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்துக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களில் பலர், இரண்டு மாதங்கள் கடந்த பின்னும், 2வது டோஸ் தடுப்பூசிக்காக பரிதவிக்கிறார்கள். எனவே, ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு கடந்த 2 மாதத்தில், எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது. அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது. தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.