சென்னை: வாக்காளர் பட்டியலில், இறந்த நபர்களின் பெயரை நீக்கும் வகையில் இறப்பு சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையமும் நாடாளுமன்றமும் தான் முடிவெடுக்க முடியும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களையும், இரட்டை பதிவுகளையும் நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் வகையில் அவர்களின் இறப்பு சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைக்கலாம். அதன் மூலம் இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக நாடாளுமன்றமும், தேர்தல் ஆணையமும் தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் யோசனையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.