×

கடல் மீன்வள சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: கடல் மீன்வள சட்ட முன்வரைவை திரும்பப்பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: பாஜ அரசு ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல்செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கிறது. மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன் பிடித் தொழிலுக்கு இச்சட்ட முன்வரைவு, கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து, நிலப்பரப்பில் இருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என்று குறிக்கப்படுகிறது. இதில் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக் கூடாது. கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

மீன் பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் சட்டத்தை மீறி பன்னாட்டு கப்பல்கள் பதிவு செய்யாமல் கட்டுப்பாடற்ற முறையில் மீன் வளத்தை கொள்ளையடிப்பதை இச்சட்டம் தடை செய்யும். மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறி கடல் மீன் வளச் சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே, கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : EU Government ,Viko , Marine Fisheries Bill, United States Government, Waco
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...