சென்னை: சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கடைகளும், பொதுமக்களும் செயல்படுவதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தொடங்கியுள்ளது. தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், வேளச்சேரி, அண்ணாநகர், வடபழனி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி துணை கமிஷனர் சரண்யா ஹரி மற்றும் தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரன் உள்ளிட்டோர் நேற்று காலை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதைப்போன்று வணிக வளாகங்கள், கடை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா விதிகளை மீறும் கடைகளை மூடி சீல் வைக்கப்படும். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரிகள் செயல்பட வேண்டும்,’’ என்றனர்.