×

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடி, மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம் : சென்னை மாநகராட்சி

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான ஊரடங்கு அமலாக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.கோவிட் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதாக  மாநகராட்சியின் கவனத்திற்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் சார்பில் வணிகவளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான மண்டல அமலாக்க குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை (10.07.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) ஆகிய இரு தினங்களில் புரசைவாக்கம், தியாகராய நகர்,  ராயபுரம் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மட்டும் ரூ.5,43,100/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மே மாதம் 2021 முதல்  15.07.2021 வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 6,668  நிறுவனங்களிடமிருந்தும்  மற்றும் 33,208 தனிநபர்களிடமிருந்து ரூ.3,35,06,790/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,013 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 52 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,00,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை (17.07.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (18.07.2021) ஆகிய இரு தினங்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 5 மண்டல அமலாக்க குழுக்கள் பிற மண்டலங்களிலிருந்து கூடுதலாக பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும்வதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  விதி மீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags : Chennai ,Chennai Corporation , சென்னை மாநகராட்சி
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...