×

16 வயது சிறுமியுடன் 41 வயது தொழிலாளிக்கு திருமணம்: பெண்ணின் தந்தை, புதுமாப்பிள்ளை கைது

குடியாத்தம்: பள்ளிகொண்டா அருகே 16 வயது சிறுமியுடன் 41 வயது தொழிலாளிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக, இருவீட்டாரின் உறவினர்களிடமும் அதிகாரிகள் மற்றும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒக்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(41), கூலித்தொழிலாளி. இவருக்கும், உறவினர் மகளான பள்ளிகொண்டா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்2 படிக்கும் 16 வயது சிறுமிக்கும் இருவீட்டாரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். தொடர்ந்து பள்ளிகொண்டா அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை திருமணம் நடந்தது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு சிறிது நேரத்தில் புகார் வந்தது. அங்கிருந்து அணைக்கட்டு வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிகொண்டா போலீசாருடன் அங்கு சென்றனர். தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த சுரேஷ் உட்பட இருகுடும்பத்தார் மற்றும் உறவினர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி புதுமாப்பிள்ளை சுரேஷ், சிறுமியின் தந்தை பொன்னுசாமி(40) ஆகிய 2 பேரை பள்ளிகொண்டா போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தன்னைவிட ஒரு வயது பெரியவருக்கு, தனது மகளை தந்தையே திருமணம் செய்து கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Puthumappillai , Girl, worker, married, father, son-in-law, arrested
× RELATED வேறு பெண்ணுடன் திருமணம்: புதுமாப்பிள்ளையை உயிருடன் எரித்த க.காதலி கைது