×

ஐசிசி உலக கோப்பை டி20: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

துபாய்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் லீக் சுற்றில்  இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த முறை டி20 உலக கோப்பையை பிசிசிஐ நடத்துகிறது. இந்தியாவில் நடைபெற வேண்டிய இத்தொடர் கொரோனா காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெற உள்ளது (அக்.17 - நவ.14).  போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.   அதே நேரத்தில் எந்த பிரிவில் எந்த அணி என்ற விவரங்களை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,  வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா,  இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய  அணிகள் இந்த தொடரின் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு  நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இந்த  8 அணிகள் தவிர  எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்று போட்டிகள்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. அதில் தரவரிசையில்  9க்கு கீழ்  உள்ள 8 நாடுகள் 2 பிரிவுகளாக பங்கேற்கின்றன.  ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில்  வங்கதேசம், ஸ்காட்லாந்து,  பபூவா நியூ கினியா,  ஓமன் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளிலும்  முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.  சூப்பர் 12 சுற்றில் மோதும் அணிகளும்  2 பிரிவுகளாக விளையாட உள்ளன. முதல் பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியும் இடம் பெறும்.

சூப்பர் 12 இரண்டாவது பிரிவில்  இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து,  ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியும் பங்கேற்கும். கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும்  ஒரே பிரிவில்  இடம் பெற்றிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : ICC World Cup T20 ,India ,Pakistan , ICC, World Cup T20, India, Pakistan
× RELATED சில்லி பாயின்ட்…