விதிஷா: மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் லால் படார் கிராமத்தில் 50 அடி ஆழ கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தவறி விழுந்தார். இதில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனை தொடர்ந்து கிணற்றில் விழுந்த நபரை மீட்பதற்காக சிலர் கயிறு மூலமாக உள்ளே இறங்கினர். இதை அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து, அங்கு நின்றிருந்த பலர் கிணற்றுக்குள் விழுந்தனர்.
இது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு படையினர் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்து 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், நேற்று முன்தினம் இரவு 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மீட்பு பணியின் போது 4 போலீசார் கிணற்றில் தவறி விழுந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.