×

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை ஆகஸ்ட் இறுதியில் 3வது அலை தாக்கும்: ‘அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியம்’

புதுடெல்லி:  நாடு முழுவதும் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், அடுத்த மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோயியியல் துறை தலைவர் சமிரான் பாண்டா கூறியதாவது: நாடு தழுவிய அளவில் ஆகஸ்ட் இறுதியில் கொரோனா மூன்றாவது அலை உருவாகக்கூடும். ஆனால், அது 2வது அலையை போன்று அதிகமாகவோ, தீவிரமானதாகவோ இருக்கும் என்று அர்த்தமல்ல. 4 செயல்கள் நாட்டில் மூன்றாவது அலையை உருவாவதற்கான காரணமாக அமையலாம்.

1 முதல், 2வது அலையினால் நோய் சக்தி குறையலாம். இது மேலும் குறையும்போது மூன்றாவது அலை தாக்கக்கூடும.
2 உருமாறிய வைரஸ்கள், நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்குவதாக உள்ளன.
3 நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்க முடியாவிட்டாலும் அவை வேகமாக பரவுவதாக இருக்கும்.
4 முன்கூட்டியே மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்துவது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கலாம்.  
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சுகாதார துறைக்கான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று கூறியதாவது: கொரோனா 3வது அலையை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் 3ம் அலையை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அது சாத்தியமானதே. அடுத்த 100 நாட்கள் நமக்கு மிக முக்கியமானவை. இதில் நாம் அனைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இப்போதுள்ள நிலையை தொடர்ந்து பராமரித்து, புதிய பாதிப்புகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினால், 3வது அலையிலிருந்து தப்பித்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

2,000 அரசு ஊழியர்கள் பலி
கொரோனா 2ம் அலையின் தீவிரத்துக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் உபி.யில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பலர் கொரோனாவுக்கு பலியானார்கள். இது குறித்து விளக்கம் அளித்த மாநில அரசு, 74 ஊழியர்கள் மட்டுமே இறந்ததாக குறிப்பிட்டது. ஆனால், அரசு ஊழியர்களின் பிரதாமிக் சிக்‌ஷன் சங்கம் 2 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதை ஒப்புக் கொள்ளும்விதமாக கொரோனாவுக்கு பலியான 2020 அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என்று உபி அரசு அறிவித்துள்ளது.

Tags : Medical Research Council of India , Medical Research Council of India, August, 3rd wave
× RELATED கடந்த 2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில்...