காஞ்சிபுரம்: காமராஜரின் 119வது பிறந்தநாள் விழா, காஞ்சிபுரம் அருகே அங்கம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் .தி.தணிகைஅரசு தலைமை தாங்கினார். கணித ஆசிரியை லதா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள், இணையவழி மூலம் கலந்து கொண்டனர். அதில் மாணவ, மாணவிகள் 12 பேர் பேச்சுப்போட்டியிலும் 6 மாணவ, மாணவிகள் காமராஜரின் படத்தை 119 செமீ119 செமீ அளவில் தரை ஓவியமாக வரை நிகழ்விலும் பங்கேற்றனர்.
அதேபோல் ஆசிரியர்களும் மாணவ, மாணவிகள் 119 பேரது வீடுகளுக்கு சென்று காமராஜர் படத்தை வழங்கி, அதற்கு வண்ணம் தீட்ட சொல்லி, பின்னர் அவர்களே பெற்று வந்து வண்ணம் தீட்டப்பட்ட 119 படங்களை தோரணமாக கட்டி காட்சிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர் .தி.சேகர் செய்தார். பள்ளி ஆசிரியர்கள் து.கலைவாணன், பொற்கொடி ஆகியோர் காமராஜர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்து பேசினர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் வீரமணி இணையவழியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, தரை ஓவியம் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்றனர்.