×

காஞ்சி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஸ்ரீ பெரும்புதூர்: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ பெரும்புதூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு வட்டார தலைவர் நிக்கோலஸ் தலைமை வகித்தார். ஸ்ரீ பெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கணபதி, பொது செயலாளர் வைரஸ் பாஷா, மாணவரணி தொகுதி தலைவர் ஹனிஷ் ராஜ்குமார், வட்டார பொது செயலாளர் ஜேக்கப்சைமன், ஒருங்கிணைப்பாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கபட்டது.

இதேபோல், ஸ்ரீ பெரும்புதூர் பஸ் நிலையம் அருகில், ஸ்ரீ பெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமையில் கட்சி கொடியேற்றி, காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, 200 பேருக்கு லட்டு வழங்கப்பட்டது.
சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார நாடார் நலச் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தன், பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கலந்து கொண்டு 500 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்தோணிராஜ், ராஜா, மொளச்சூர் வியாபாரிகள் சங்க தலைவர் திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு சாலவாக்கம் பஜார் வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படிக்கும் 96 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா பென்சில் உள்ளிட்ட தொகுப்புக்கள் வழங்கினார். மேலும் சாலவாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆபரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, எண்ணெய், காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்பட தொகுப்புகள் வழங்கினார். தொடர்ந்து, சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காமராஜர் பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் சக்திவேல் செய்தார். இதில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், வெங்கடேசன், நடராஜன், பாபுஷெரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சி கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பொன்.நடராசன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் எபிநேசர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை சென்ட்ரல் ரவுண்டு டேபிள் நிர்வாகி ரத்தன்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார்.

Tags : Kamaraj ,Kanchi district , Kamaraj's birthday party in Kanchi district
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...