×

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார் மா.சுப்பிரமணியன்

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் கொரோனா தடுப்பூசி, மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை, 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அளித்துள்ளார். இன்று பிற்பகலில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக தன்னிடம் ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாக பின்னர் பேசிய மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்குவது குறைவாகவே இருந்து கொண்டிருக்கிறது. உடனடியாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கோரிக்கையும் தற்போது முதன்மையாக வைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் மட்டுமல்லாமல் மாணவர் சேர்க்கையும் தொடங்காத ஒரு சூழலும் இருந்து வருகிறது. உடனடியாக கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். மாணவர் சேர்க்கையையும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சி எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் மன்சுக் மாண்டவியாவிடம் மா.சுப்பிரமணியன் வைத்துள்ளார்.

Tags : Subramanian ,Union Health Minister ,Mansuk Mandavia ,Delhi , ma.subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...