×

வளர்ச்சி திட்டங்களுக்காக இயற்கையை அழிக்காதீர்கள்... நீர் நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது : தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை!!

சென்னை: இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்துவதற்காக படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்புவதாகவும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த தாசில்தாரருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளதாகவும், ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்ம் மாநில அரசே நீர் நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது. நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம். இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள கூடாது, என்று கருத்து தெரிவித்தனர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags : TN , இயற்கை
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்