×

திருவேற்காடு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு ஆவணங்களை எடுத்துவராத போலீசாருக்கு மாஜிஸ்திரேட் எச்சரிக்கை

சென்னை: பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் மாஜிஸ்ட்ரேட்டாக இருப்பவர் ஸ்டாலின். இவர், நேற்று முன்தினம்  திருவேற்காடு காவல் நிலையத்திற்கு திடீரென ஆய்வு செய்வதற்காக  சென்றார். அப்போது பணியில் இருந்த போலீசாருக்கு வந்திருப்பது மாஜிஸ்திரேட் என்று தெரியவில்லை. யார் நீங்கள் என்று  விசாரித்தனர். அதன் பிறகே  மாஜிஸ்திரேட் என்பது தெரிந்துள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காவல் நிலையத்தில்  மாஜிஸ்திரேட் ஆய்வு   மேற்கொண்டார்.

அப்போது அங்கே சில பெண்களும், சிறுவனும்  இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காவல் நிலையத்தில் வைத்திருந்தது குறித்து போலீசாரிடம் மாஜிஸ்திரேட் விளக்கம் கேட்டுள்ளார். இதுகுறித்து உரிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு  வரவேண்டும் என உத்தரவிட்டு விட்டு பின் மாஜிஸ்திரேட் சென்றுவிட்டார். இந்நிலையில், வழக்கு பதிவு செய்யாமல் வைத்திருந்த நபர்கள் குறித்து விளக்கம் அளிக்க  திருவேற்காடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேரில் வந்து மாஜிஸ்திரேட்டை பார்க்கவில்லை என  கூறப்படுகிறது.  

இதுகுறித்து நேற்று நீதிமன்றத்திற்கு வந்த போலீசாரிடம், விளக்கம் அளிக்கவும் உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு கண்டிப்புடன் கூறியுள்ளார். பின்னர் ஆவணங்களை எடுத்துக் கொண்டு தாமதமாக வந்த இன்ஸ்பெக்டரை மாஜிஸ்திரேட் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.  அவர் கொடுத்த ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு மாலையில் தெரிவிப்பதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

Tags : Thiruverkadu police station , Thiruverkadu, Police Station, Police, Magistrate, Warning
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...