சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத் தலைநகரம் பெங்களூரில் பேசிய ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத்,‘‘ மேகதாது சிக்கலை இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி தீர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு ஆதரவான குரல்கள் தான்.இந்த விவகாரத்தில் இரு மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு, பேச்சு நடத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. மேகதாது அணை தொடர்பாக கர்நாடகம் எத்தனை விண்ணப்பங்களை தாக்கல் செய்தாலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லை என்றால் அவற்றை ஒன்றிய அரசு ஆய்வு செய்யாமலேயே நிராகரிப்பது தான் நீதியாகும். இதைத் தவிர பேச்சுவார்த்தை ஆலோசனை என்ற எந்தப் பெயரில் இது குறித்த விவாதம் நடைபெற்றாலும் அது இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் நீர்த்துப் போகவே வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.