×

ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்றும், அதற்குள் பணிக்குச் சேராதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. இதன் காரணமாக, ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் பணி கிடைக்காதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இச்சூழலில் கொரொனா காரணமாக ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்றும், இதுகுறித்து புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கை வெளியிட்டு விட்டதாகவும், ஆனால், இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை எவ்விதமான ஆணையையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர முடியாமல் தவிக்கிறார்கள் என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்து ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள சூழ்நிலையில், தமிழக அரசின் சார்பில் அரசாணை எதுவும் வெளியிடப்படாதது வருத்தத்தை அளிக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட்டு, அவர்கள் பணிகளில் சேர ஆவன செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : TN Government , ஓ.பன்னீர்செல்வம்
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது