திருப்பூர்: திருப்பூர் அருகே பட்டியல் இன இளைஞர் மரணத்தை மீண்டும் விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மூத்தூரை சேர்ந்த சசிகுமார் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த காங்கேயம் போலீசார், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இறந்துவிட்டதாக வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் பட்டியல் இன வகுப்பை சேர்ந்த சசிகுமார், முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்திருக்கிறார்.
அப்போது 50 ஆயிரம் ரூபாயை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணை முடிவடைந்த சில நாட்களில் சசிகுமாரை தாக்கியதோடு சாதி பெயரை கூறி அவரை முத்துக்குமார் திட்டியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகாரை போலீசார் முறையாக விசாரணை செய்யாததே சசிகுமார் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டினர்.
இதனால் மறு விசாரணைக்கு உத்தரவிட கோரியும் அவர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சௌர்ணம் நடராஜன், மறு விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறார். சசிகுமார் மரணம் தொடர்பாக காங்கேயம் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை நிராகரித்த நீதிபதி, பாரபட்சமில்லாத காவல்துறை அதிகாரிகை கொண்டு விசாரணை நடத்தி 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.