சென்னை: டிஎன்பிஎஸ்சிக்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) புதிய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி உமா மமேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி கிரண்குராலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 23ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சியில் காலியாக இருந்த உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியின் புதிய உறுப்பினர்களாக 4 பேரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் மரிய சூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொறுப்பெற்ற நாள் முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை அந்த பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தம் 12 பேர் உறுப்பினர்களாக இருப்பர். தற்போது தேர்வாணைய உறுப்பினர்களாக முனைவர் கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலு சாமி ஆகியோர் இருந்து வருகின்றனர். தற்போது புதிதாக 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.