திருவள்ளூர்: திருத்தணி தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம், திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு, திருத்தணி சட்டமன்ற தொகுதியில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
எனவே எங்கள் தொகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டி பள்ளியில் புதிய வங்கி கிளை அமைத்து தர வேண்டும். திருவாலங்காடு ஒன்றியம் சிவாடாவில் ரூ.30 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவருடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணன், சி.ஜெ.சீனிவாசன், பேரூர் செயலாளர் டி.ஆர்.கே..பாபு ஆகியோர் இருந்தனர்.