×

இந்தியாவில் முதல் முறையாக நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து உதகை மாணவி அசத்தல்..!!

நீலகிரி: நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் உதகமண்டலம் அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி. அந்த புதிய நுண்ணுயிரிக்கு தமிழிலான்ஸிஸ் என்று தமிழிலேயே பெயர் சூட்டி இருப்பது சிறப்பு. செழிப்பான புல் வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்க செய்து மண்ணை தரம் வாய்ந்த உரமாக மாற்றும் ஆற்றல் கொண்டது என்பதால் தமிழிலான்ஸிஸ் நுண்ணுயிரி வரவேற்புக்கு உரியது மட்டுமின்றி பராமரித்து பாதுகாக்கக்கூடியதாகவும் உள்ளது. உதகை அரசு கலை கல்லூரியில் படித்து வரும் விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி முப்சிதா துனிசா.

நீலகிரி மாவட்டம் பாட்டவயலை சேர்ந்த இவர், இந்தியாவில் முதல் முறையாக புதிய வகை நுண்ணுயிரியை கண்டுபிடித்து இருப்பதுடன் தமிழில் பெயர் சூட்டி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகத்தில் 5 வகையான புதிய நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது அரசு கல்லூரி அருகே மண்ணுக்கு அடியில் 1 மில்லி மீட்டருக்கும் குறைவாக நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக்கூடிய ஒரு மண் பூச்சியை கண்டுபிடித்தார்.

அதனை ஆராய்ச்சி செய்த போது அந்த பூச்சி பயோ நிகோரஸ் என்ற பேர் இனத்தை சேர்ந்த பயோனிசிரஸ் என்ற புதிய வகை பூச்சி என்பது தெரியவந்தது. இதே குடும்பத்தை சேர்ந்த 6 வகையான பூச்சிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது 7வது வகை என்பது தெரியவந்தது. பயோனிசிரஸ் வகை புதிய பூச்சி சீனா, கொரியா, சுசர்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சியின் டி.என்.ஏ. மாதிரிகள் ஸ்பெயின் நாட்டில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்கத்தாவில் இருக்கும் சுவலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன் புதிய நுண்ணுயிரி என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். புதிய வகை பூச்சியான தமிழிலான்ஸிஸ்க்கு கண்கள் கிடையாது. செழிப்பான புல்வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்க செய்து மண்ணை தரம் வாய்ந்த உரமாக மாற்றும் ஆற்றல் கொண்டவை. பாக்டிரியா போன்ற கிருமிகள் ஜீரணிக்கமுடியாத காளான் கழிவுகளையும் இப்பூச்சிகள் தின்று ஜீரணித்துவிடும். மண்ணின் தரத்தை பல மடங்கு உயர்த்தக்கூடியவை என்பது கூடுதல் சிறப்பு.


Tags : India , Benefit, New Microbial, Auxiliary Student
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...