செங்கல்பட்டு: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் 2 வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவாகி இருந்தது. ஒரு வழக்கில் போக்சோ சட்டம் போடப்படாமல் இருந்தது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தங்கையிடமும் சிவசங்கர் பாபா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கிலும் புதிதாக அவர் மீது மேலும் ஒரு போக்சோ சட்டம் பாய்ந்தது. மூன்றாவதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்துள்ளதாக செங்கல்பட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அவர் 2வது போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். வருகின்ற 27ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது தற்போது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கினை விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட சுஷ்மிதா என்ற பெண்மணிக்கு முன்ஜாமீன் கோரியும் மனு வழங்கப்பட்டுள்ளது.