பூரி: ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் பூரியில் ஆண்டு தோறும் நடைபெறும் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். ஆனால் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்தஆண்டு ரத யாத்திரை வெறிச்சோடியது. இதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி ரத யாத்திரை நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி நகரில் 2 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் ரத யாத்திரையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. கோயில் ஊழியர்கள், சேவகர்களில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்கள் மட்டும் ரத யாத்திரையில் பங்கேற்றனர். ஜெகன்நாதர் ரத யாத்திரையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த திருவிழா 9 நாட்களுக்கு நடக்கும்.