×

நெல்லை அருகே வெறிச்செயல்: 5 மாத கர்ப்பிணி கழுத்து நெரித்து கொன்ற தாய், தங்கை கைது

நாங்குநேரி: நெல்லை மூலைக்கரைப்பட்டி அருகே நடத்தை சந்தேகத்தில் கர்ப்பிணி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தாய் மற்றும் தங்கையை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அடுத்த முத்துவீரப்பபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முருகம்மாள் (60). தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் சேர்மக்கனி (35), அருணாசலம் என்ற செல்வி (30) உள்ளிட்ட 4 மகள்கள். இவர்களில் சேர்மக்கனியை களக்காடு அருகே பொத்தைசுத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுடலைமுத்துக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த சேர்மக்கனி, தாய் வீட்டில் வசித்து வந்தார். பின்னர் அவரது தங்கை அருணாசலத்தை சுடலைமுத்துவுக்கு 2வதாக திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால், அவரும் கணவரைப்பிரிந்து  தாய் வீடு திரும்பினார்.

இதனிடையே சேர்மக்கனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கும் ஏற்பட்ட தொடர்பில் சேர்மக்கனி கர்ப்பமானார். இதை அவரது தாய் முருகம்மாள் கண்டித்தார். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த சேர்மக்கனி, நேற்று காலை வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். உடல்நிலை பாதிப்பால் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தாய் மற்றும் தங்கை தெரிவித்தனர். தகவலறிந்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வந்து தாய், தங்கையிடம் விசாரணை நடத்தினர். இதில் நடத்தை சந்தேகத்தில் ஏற்பட்ட மோதலில் தாயும், மகளும் சேர்ந்து சேர்மக்கனியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தது  தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Mania ,Nellai , Nellie, pregnant, murdered, arrested
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...