×

ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா தொடக்கம் : கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!!

புபனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா இந்த ஆண்டு பக்தர்களின் பங்கேற்பில்லாமல் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஜூலை மாதங்களில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காலை முதல் ஒடிசா பூரி ஜெகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரிகைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த போதும் கோவில் வளாகத்தில் ரதம் இழுப்போர், நிர்வாகிகள் என ஏராளமானோர் குவிந்து இருந்தனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் பூஜைகளில் பங்கேற்க கோவிலுக்குள் முந்தி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பூரி ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரை இன்று பிற்பகல் தொடங்கும் என்று தெரிகிறது. ஒவ்வொரு தேரையும் 5 நபர்களை கொண்டே இழுக்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை தடுக்கும் விதமாக பூரி ரத யாத்திரை நடைபெறும் க்ராண்ட் சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.வீட்டில் இருந்தவாறே தொலைக்காட்சி மூலம் தேரோட்டத்தை பார்க்க மாநில நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது. பூரி ஜெகநாதர் கோவிலின் ரத யாத்திரை உலகிலேயே மிக பழமையான ரத யாத்திரிகையாக கருதப்படுகிறது.

சந்திர நாள்காட்டியின் படி ஒவ்வொரு வருடமும் 3வது மாதத்தில் 2வது வளர்பிறையின் சுழற்சியின் போது தான், இங்கு ரத யாத்திரை நடைபெறும். இதன்படி, அலங்கரிக்கப்பட்ட பூரி ஜெகநாதர், சகோதரர் பாலா பத்திரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகியோர் தனித்தனியாக பூரி நகர சாலைகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார்கள். இதனை காண உலகம் முழுவதிலும் இருந்த பக்தர்கள் பூரி நகரில் குவித்து வழக்கம். கொரோனாவால் 2வது ஆண்டாக பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால், பூரி நகரம் கலையிழந்து காணப்படுகிறது. 


Tags : Puri Jagannath Temple Chariot Pilgrimage ,Odisha , ஒடிசா
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை