×

பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் பாலத்தில் அடுத்த 67 நாள் ரயில் சேவை கட்

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஜூலை 15 முதல் 67 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஜூன் 28ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை பாதித்தது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் செய்வதற்கு ஏதுவாக ராமேஸ்வரம் - மண்டபம் இடையே வரும் 15ம் தேதி முதல் 67 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஜூலை 14ம் தேதி முதல் செப். 14ம் தேதி வரை மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருச்சி - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்படும் கோவை - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 20 முதல் செப். 14 வரை ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதி சிறப்பு ரயில் ஜூலை 15 முதல் செப். 12 வரை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இேதபோல் மாண்டுயாடிஹ், ஓகா, புவனேஸ்வர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bomben Bridge , Maintenance work, Pamban bridge, train service
× RELATED பாம்பன் பாலத்தின் பராமரிப்பு பணியால்...