ஐதராபாத்: விபத்தில் சிக்கி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலுங்கு சினிமா நடிகரும், இயக்குனரும், விமர்சகருமான கத்தி மகேஷ் (வயது 45), ஆந்திர மாநிலம் கோடவலூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் பகுதியில் கடந்த ஜூன் 26ம் தேதி காரில் சென்றபோது, சித்தூரில் இருந்து ஐதராபாத் செல்லும் வழியில் விபத்தில் சிக்கினார். இதில் மகேஷின் தலை மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. முதுகு எலும்பிலும் முறிவு ஏற்பட்டதால், அவருக்கு சென்னை தனியார் மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மருத்துவ செலவுக்காக ஆந்திர அரசு ரூ.17 லட்சம் வழங்கியது.
கடந்த 14 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த மகேஷுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். ‘நேனே ராஜு’ உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், ‘பெசராட்டு’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியுள்ளார். டி.வி தொடர்களில் நடித்திருப்பதுடன், யூடியூப்பில் திரைப்பட விமர்சனங்களையும் செய்து வந்தார். கத்தி மகேஷின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.