சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ரயில் நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பயணிகள் பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனை ஏதும் செய்யாமல் நேரடியாக ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்திருக்கும் பயணிகளிடம் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புகின்றனர்.
இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் ராயபுரம் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் தினமும் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். பரிசோதனை செய்யும் முன்பு, பயணியின், பெயர், ஆதார் எண், முகவரி, செல்போன் எண்ணை பெற்று கொள்கின்றனர். அதன்பிறகு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பயணி எந்த மாவட்டத்தில் இருக்கிறாரோ, அந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.