×

அரக்கோணம் அருகே பயங்கரம்; கருங்கல் வீசி குழந்தை படுகொலை: தாய் கதறல்

நெமிலி: நெமிலி அருகே இளம்பெண் 2வது பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தபோது அவரது முதல் குழந்தை கருங்கல் வீசி கொலை செய்யப்பட்டது. குழந்தையின் சடலத்தை பார்த்து அவர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த  நெமிலி அருகே ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கனிமொழி. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது காதலித்துள்ளனர். இதையடுத்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு கபிலேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. தற்போது கனிமொழி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இதனால் பிரசவத்திற்காக ஆறுமுகம் தனது மனைவி கனிமொழி மற்றும் மகன் கபிலேஷை அழைத்துக்கொண்டு நேற்று ஆலப்பாக்கம் சிறுவளையம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.  கனிமொழியின் தாய் வீட்டில் அவரது அக்காள், தங்கை, அவர்களது கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு அனைவரும் ஒரே அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் கனிமொழியின் குழந்தை கபிலேஷ் திடீரென அலறியுள்ளான்.

சத்தம் கேட்டு எழுந்த கனிமொழி மற்றும் குடும்பத்தினர் பார்த்தபோது, கபிலேஷ் மீது கருங்கல் வீசியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த குழந்தை கபிலேஷை மீட்டு புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  அழைத்துச்சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கபிலேஷ் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது. இதைக்கண்ட நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி கதறி அழுதார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், எஸ்ஐ சாமுவேல் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் வேலூரில் இருந்து மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோப்ப நாய் அதே பகுதியை சுற்றிவந்து நின்றதால் கருங்கல் வீசி குழந்தையை கொன்றது யார்? என கனிமொழியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Terror near the hemisphere; Ebony child murder: Thai roar
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...