×

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு..!

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  சிபிசிஐடி மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் அவரை பிடிக்க தீவிரமாக களம் இறங்கினர். டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி போலீஸ் எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி ஜெயமோகன், இன்ஸ்பெக்டர் குணவரதன் ஆகியோர் சிவசங்கர் பாபா தங்கியிருந்த கேளம்பாக்கம் ஆசிரமத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தன. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின்கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஆலோசனை நடத்தி வந்தனர். 3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் போக்சோவில் பதிவான நிலையில், சட்ட வல்லுநர்களுடன் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் உள்ள அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Sivashankar Baba ,Pulhal , Another pox case against Sivashankar Baba who is lodged in Pulhal jail ..!
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...