×

உத்தரபிரதேசத்தில் குடும்ப சண்டையை தீர்ப்பதற்காக பஞ்சாயத்து பேசிய தந்தை, சித்தப்பா சுட்டுக் கொலை: பெண்ணின் கணவர் குடும்பத்தார் வெறிச்செயல்

பரேலி: உத்தரபிரதேசத்தில் குடும்ப சண்டையை தீர்ப்பதற்காக பெண்ணின் கணவர் குடும்பத்தாரின் வெறிச்செயலால் பஞ்சாயத்து பேசிய தந்தை, சித்தப்பா ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் அடுத்த ஜரேலி கிராமத்தில் வசிக்கும் ஹைதர் அலி, தனது மகள் ஷாமா பர்வீனை, அதே பகுதியைச் சேர்ந்த அசார் அலி (20) என்பவருக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக, இருவீட்டு பெரியவர்களும் தலையிட்டு, அவ்வப்போது தம்பதியினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதையடுத்து கோபித்துக் கொண்டு சென்ற அசார் அலியின் மனைவி, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்ப்பதற்காக, ஹைதர் அலியின் வீட்டில் இருதரப்பு பெற்றோரும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். வாக்குவாதத்தில் இருந்த நிலைைமை, துப்பாக்கி சூடு வரை சென்றது. அப்போது, அசார் அலிக்கு ஆதரவாக பேசவந்த சிலர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், பெண்ணின் தந்தை ஹைதர் அலி (40) மற்றும் அவரது சகோதரர் குல்ஷன் அலி (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குல்ஷன் அலி க்ஷேத்ரா பஞ்சாயத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினராவார். இருதரப்பு பேச்சுவார்த்தை பஞ்சாயத்தில் ஈடுபட்ட அன்வர் அலி, ஃபர்மன், ஹைதர், நவாப் அலி, வாசிம், சோபியா மற்றும் குல்ஷனின் மனைவி உட்பட சுமார் 10 பேர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தனர். அடுத்தடுத்த சில நிமிடங்களில், வீடே ஒரே ரணகளமாக மாறியது. ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடப்பதும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடியும் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்தில் படுகாயத்துடன் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்த ஹைதர் அலி, குல்ஷன் அலி ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். குடும்ப பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த பஞ்சாயத்தில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திங உள்ளது. இதுகுறித்து பரேலி எஸ்பி ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், ‘கணவன் – மனைவி குடும்ப தகராறில், கணவர் தரப்பை சேர்ந்த சிலர் மனைவி குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதில் மனைவியின் தந்தையும், சித்தப்பாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். …

The post உத்தரபிரதேசத்தில் குடும்ப சண்டையை தீர்ப்பதற்காக பஞ்சாயத்து பேசிய தந்தை, சித்தப்பா சுட்டுக் கொலை: பெண்ணின் கணவர் குடும்பத்தார் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Chitappa ,Panchayat ,Uttar Pradesh ,Bareilly ,Siddappa ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...