திருப்புவனம்: கீழடி 7ம் கட்ட அகழாய்வில் நெசவு தொழிற்சாலையில் பயன்படுத்தும் பெரிய தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு தளங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
கீழடியில் சிறிய வேலைப்பாடுடன் கூடிய பானை ஓடு கண்டறியப்பட்டது. முழுமையாக தோண்டியபோது உருளை வடிவிலான தொட்டி போன்ற அமைப்பு வெளியே காணப்பட்டது. 44 செ.மீ உயரம், 77 செ.மீ அகலம் கொண்டது. கீழடியில் ஏற்கனவே நடந்த அகழாய்வில் நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் களிமண் குண்டு, நெசவு ஊசி, தக்களி கண்டறியப்பட்டன. தற்போது கிடைத்துள்ள தொட்டி போன்ற அமைப்பும் நெசவு தொழிற்சாலையில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.