அரக்கோணம்: ஜம்முவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக அரக்கோணம் விமான தளத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் டிரோன் பறந்தால் சுட்டு தள்ளப்படும் என்று கடற்படை எச்சரித்துள்ளது.ஜம்மு விமானப்படை தளத்தின் மீது கடந்த மாதம் 27ம் தேதி டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன்களை, இந்திய ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மற்றும் உளவு பார்க்கவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்துவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடற்படை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இந்த கடற்படை தளம் அமைந்துள்ள பகுதியை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிரோன், ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. விதிமீறி பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். டிரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை யாராவது இயக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.