புதுடெல்லி: கோவையை அடுத்த மதுக்கரை-வாளையார் இடையிலான ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு இறக்கின்றன. இது பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது பற்றி விளக்கம் அளிக்கும்படி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரள வனத்துறை, தென்னக ரயில்வேக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏ.கே.கோயல் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘‘கோவை - கேரள எல்லைகளில் ரயில்கள் மோதி யானைகள் இறப்பதை தடுக்க, விபத்து நடக்கும் 2.5 கிமீ பாதையில் சிசிடிவி கேமிராவுடன் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும். தண்டவாளத்தின் இரு பகுதிகளிலும் பிரகாசமான விளக்குகளை வைக்க வேண்டும். அவற்றை பார்க்கும் யானைகள், திரும்பி சென்று விடும். மேலும், இந்த பகுதியில் ரயில்கள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டும்,’’ என்றார். இந்த கருத்தை ஏற்பதாக வனத்துறை, ரயில்வே துறையும் ஏற்றன. பின்னர், தலைமை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்,’ என தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தார்.