×

ஆறு லட்சம் தடுப்பூசி மருந்து அதிமுக ஆட்சியில் வீணடிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திண்டுக்கல்:  கடந்த அதிமுக ஆட்சியில் 6 லட்சம் தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வந்தார்.  திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவை திறந்து வைத்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள், 70 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயாராக உள்ளது.
தமிழகத்தில் அரசின் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அப்போது 6 லட்சம் டோஸ் வரை வீணடிக்கப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 டோஸ்கள் வந்துள்ளன.  இதனை வைத்து ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும். இதனை வீணாக்காமல் முறையாக பயன்படுத்தி ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதுதமிழக சுகாதார துறைக்கு கிடைத்த வெற்றி. இதற்காக மத்திய ஐசிஎம்ஆர், தமிழக சுகாதாரத்துறையை பாராட்டியுள்ளது. இந்த மாதத்திற்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டும்.

ஆனால் இதுவரை 10 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளன. நாளை அல்லது மறுநாள் மருந்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுக்கள் வருகின்றன. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். ஆய்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், கலெக்டர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Minister ,Subramanian , Six lakh vaccines Waste in AIADMK regime: Interview with Minister Ma Subramanian
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...