சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இணையவழியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் பதிவேடு முறையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள இணையவழி புகார் தெரிவிக்கும் முறையுடன் பதிவேடு முறையையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் இருப்பதால், எழுத்து மூலம் தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இணையவழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையோடு புகார் பதிவேட்டையும் பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.