நார்தாம்டன்: இங்கிலாந்து-இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி நேற்று இரவு நார்தாம்டனில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் குவித்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் 55(27பந்து), ஆமி ஜோன்ஸ் 43 (27பந்து) ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 178 ரன் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை கொட்டியதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் ஷபாலி வர்மா 0, மந்தனா 29, கேப்டன் கவுர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்தின் நாட்ஸ்கைவர் ஆட்டநாயகி விருது பெற்றார். 2வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.