கும்பகோணம் : கும்பகோணத்தில் கொரோனா தடை உத்தரவு அமலில் இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக மகாமககுளம் பகவத் படித்துறை, டபீர் படித்துறை ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பலரும் கவலையில் இருந்தனர். சிலர் வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வுகள் அளித்ததையடுத்து கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து நேற்று ஆனி அமாவாசை முழு நாளும் சர்வ அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டது. திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த திருப்தி ஏற்படுத்தும். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும் என்பது நம்பிக்கை.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ருதோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. நேற்று திருவாதிரை ஆனி அமாவாசை முன்னிட்டு கும்பகோணம் டபீர் படித்துறையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.