பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் கொரோனா விடுமுறையில் கல்லூரி மாணவர்கள் கூலி வேலையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையே கூலிவேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
பந்தலூர் பகுதியில் ஏராளமான மாணவர்கள் பஞ்சாயத்தில் நடைபெறும் சாலை மற்றும் தடுப்புசுவர் அமைக்கும் பணிகள், தேயிலைத்தோட்டங்களில் உள்ள பல்வேறு பணிகளுக்காகவும் சென்று வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பெற்றோர்களுக்கு வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் குடும்ப செலவு மற்றும் கல்லூரிகள் திறந்தவுடன் தங்களது கல்வி செலவிற்காகவும் கூலி வேலைக்கு செல்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.