ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓர நடைபாதை கடைகள் இருப்பதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் அந்த கடைகளை அகற்றினர். இதற்கு சாலையோரக்கடை வியாபாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையறிந்த, திருவள்ளூர் தாசில்தார் செந்தில், டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர்கள் தாரணீஸ்வரி, குமார் மற்றும் வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடைபாதை வியாபாரிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நடைபாதை வியாபாரிகள் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட அதிகாரிகள் இன்னும் 2 வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர்.