சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 1600 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் 4 பேர் கொண்ட ஆடவர் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி மற்றும் 1600 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திற்கான 4 பேர் கொண்ட அணியில் தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுதா வெங்கடேசன். வாள் சண்டையில் பவானி தேவி, பாய்மர படகு போட்டியில் கே.சி.கணபதி, வருண் தாக்கர், விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன், ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளது மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஒலிம்பிக்கில் தேர்வாகியுள்ள மதுரை சேர்ந்த 22 வயதான ரேவதி, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். பாட்டியின் வழிகாட்டுதல், பயிற்சியாளர் மற்றும் ஊக்கத்தின் அடிப்படையில் திறமை வெளிகொணரப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கட்டாயம் முத்திரை பதித்து, வாகை சூடுவார்கள் என நம்புகிறேன். மேலும் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.