திருமலை: ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமைகளில், கருவறை முதல் கோயில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும் பணியான, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 16ம் தேதி இந்தாண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இதற்காக, வரும் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படும். அப்போது, கருவறை உட்பட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, மூலிகை கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.