×

மேகதாது பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம்

* நாளை மறுநாள் நடக்கிறது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக   அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு   நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பிரதமர்  மோடியை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மேகதாது அணை  பிரச்னை  குறித்து விரிவான வகையில் விளக்கினார். பெங்களூரு குடிநீர்  தேவைக்காக இந்த அணை கட்டப்படுகிறது என்ற கர்நாடக அரசின் விளக்கம்  ஏற்புடையது அல்ல. இத் திட்டத்தால் தமிழக விவசாயிகளின்  நலன் மிகவும்  பாதிக்கப்படும். எனவே தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு மோகதாது அணை  திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என பிரதமரிடம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், நீர்வளத்  துறை அமைச்சர்  துரைமுருகனும், கடந்த 6ம் தேதி ஒன்றிய நீர்வளத் துறை  அமைச்சரை டெல்லியில்  சந்தித்து, இந்த பிரச்னையில் ஒன்றிய அரசு தகுந்த  நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என்று கோரியுள்ளார். மேகதாது அணை அமைக்க  தமிழ்நாடு அரசு  எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கோரி கர்நாடக முதல்வர்  எடியூரப்பா தமிழக  முதல்வருக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால்,  தமிழ்நாடு  விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின்   தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை   அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்து   முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில் மேகதாது அணை பிரச்னை குறித்து ஆலோசிக்க அனைத்து சட்டமன்ற   கட்சிகளுக்கான கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.   இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற  இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள்  தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு  மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து  மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, நமது  மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  மேலும், நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன் ஒன்றிய நீர்வளத் துறை  அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும் மேகதாது அணை அமைந்திட  தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சருக்கு பதில் கடிதம்  எழுதியுள்ளார்.  இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக்  காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை  பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து கலந்தாலோசிக்க,  தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், வருகிற 12ம் தேதி (திங்கட்கிழமை) காலை  10.30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்   நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகளின் நலனை காப்பதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 12ம் தேதி காலை 10.30க்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.



Tags : Discuss the cloud problem All party meeting
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...