சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகரும், தென்னிந்திய திரைப்படம் மற்றும் கலை இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான வீரசமர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் திரைப்படத்துறையில் 15 ஆண்டுகளாக கலை இயக்குநராகவும், நடிகராகவும் பணிபுரிந்துள்ளேன். நான்தென்னிந்திய திரைப்படம் மற்றும் கலை இயக்குநர்கள் சங்கத்தில் பொது செயலாளராக இருந்தேன். தற்போது கலை இயக்குநர் சங்கத்தின் தலைவர் அங்கமுத்து சண்முகம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதனால் சங்கத்தில் தேர்தல் நடத்த உறுப்பினர்கள் கூடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சங்க தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். இதனால் உமாசங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் நான் சங்கத்தேர்தலில் போட்டியிட கூடாது என்று என் மீது தவறான, பொய்யான, அவதூறு செய்திகளை உறுப்பினர்கள் மத்தியில் சங்கத்தின் போலி லெட்டர் பேடு தயார் செய்து என்னை சங்கத்தில் இருந்து நீக்கியதாக உறுப்பினர்கள் மத்தியில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகின்றனர்.
எனவே, சங்க உறுப்பினர்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வரும் உமாசங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.